Monday, May 05, 2008

மழையின் துணை

தொடக்கப் புள்ளியும் தெரியவில்லை
போய்ச்சேரும் புள்ளியும் தெரியவில்லை


கரைகளைத் தழுவிக்கொண்டு ஓடுகிறது
காட்டாறு

வெறியின் கர்ஜனையில் வெளிப்படுகிறது
வெல்லமுடியாத வேகம்

கரையில் கால்நீட்டி அமர்ந்த
பாறைமீது நின்று பார்க்கிறேன்

நான்குநாள் முன்புவரைக்கும்
மணல்புழுதியாகக் கிடந்த இடம்
நம்ப முடியாதவகையில் மாறிவிட்டது

அடங்க மறுக்கிற சீற்றத்தோடு
ஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரம்வரைக்கும்
கருமேங்கள் நிறைந்திருக்கின்றன

எந்தக் கணமும்
அவை தீண்டப்பட்டு
பொழிவதற்குக் காத்திருக்கின்றன
வெளிச்சம் தன்னை மறைத்துக்கொள்கிறது

சூரியனின் அச்சம்
ஆச்சரியமாக இருக்கிறது

தற்செயலான ஒரு கணத்தில்
விசைபெற்ற கணைபோல இறங்கிய மழை
உடம்பை நனைத்து வழிகிறது
ஒவ்வொரு நீர்முத்தும்
பளிரென மோதி உடைகிறது
கண்களில் மின்னல் கூசும் கணத்தில்
உணரமுடிகிறது

மழையின் இருப்பை
யாரோ துணைக்கு நிற்பதைப்போல

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...