அழகான அதிகாலை
பனியின் மென்மையை ரசிக்க இடம்தராமல்
வலுக்கட்டாயமாக வந்துவிடும்
அலுவலக நினைவு.
உருண்டோடும் காலத்தின் பின்னால்
நானுமொரு சக்கரமாய்..
மெல்ல தலை காட்டிய சூரியனின் பார்வை
தகிக்கத் துவங்க,
திணிக்கப்பட்ட வாழ்க்கையோடு
போரிடத் தொடங்குகிறேன்
நிராயுதபாணியாய்..
பேருந்தை துரத்தும் அவசரச் சூழலில்
'புளிச்'சென்று வந்து விழும்
காவிநிறத்தில்...
சிவந்த பற்கள் காட்டி அகோரமாய் சிரிக்கும்
முகமறியா மனிதனின் துப்பலை
மெளனமாய் ஏற்று நிறம் மாறத்துவங்கும்
நகரத்துத்
தார்ச்சாலை
ஏதும் செய்ய இயலா நிலையில்
ஒரு முறைப்பை மட்டும் கொட்டி விட்டு
கூட்டத்தில் கலந்து மறையும்
குற்றவாளியாய் நான்..
No comments:
Post a Comment